கொழும்பில் ஐதேக பாரிய பேரணி – மைத்திரிக்கு சவால்
மீண்டும் தம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்தியது.
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்கான ஐதேக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐதேக தலைவர்களும், கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இங்கு உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முதலில் அதிபர் தேர்தலை நடத்தத் தயாரா என்று சவால் விடுத்தார்.
அதேவேளை, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, பொதுத் தேர்தல் அல்லது அதிபர் தேர்தல் எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும், ஆனால் அது அரசியலமைப்புக்கு அமைவாக நடக்க வேண்டும் என்றும் கூறினார்.