சற்று நேரத்தில் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது. நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களை அடுத்து இன்று பிற்பகல் 1.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. முன்னதாக, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் இன்றைய அமர்வுகள் குறித்த ஒழுங்குப்பத்திரம் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இதையடுத்து, நிலையியல் கட்டளையின் 22 ஆவது பிரிவின் கீழ் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.
நேற்றைய அமர்வுகளில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களைக் கருத்தில் கொண்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகரின் வேண்டுகோளை அடுத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது, பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.