மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்கா காவல்துறை
சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியனவும், போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய வங்கி மீண்டும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிறிலங்கா காவல்துறை திணைக்களம், சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழேயே இருந்து வந்தது.
போர் நடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிறிலங்கா காவல்துறை, அனைத்துலக அழுத்தங்களை அடுத்து மகிந்த ராஜபக்சவின் முன்னைய ஆட்சிக்காலத்தில், சட்டம், ஒழுங்கு அமைச்சு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது, சிறிலங்கா அதிபர் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறையைக் கொண்டு வந்துள்ளார்.