கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘2018ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நிதியுதவியுடன் 1.8 மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் மூலம், 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருள்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் குறைத்தல் பணியகத்தின் அதிகாரிகள், ஒக்ரோபர் 8ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை சிறிலங்காவில் மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்காவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் பகுதிகளுக்குச் சென்ற இவர்கள், மீள்குடியேற்ற அமைச்சு, உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் சந்தித்தனர்.
2002ஆம் ஆண்டில் இருந்து, சிறிலங்காவில் வெடிபொருள்களை அகற்ற 9.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
வடக்கு, கிழக்கில் 8 மாகாணங்களில் அமெரிக்காவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளில், 664 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.