வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – சுவாமிநாதன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணி சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,
“மிகவும் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே,சீன நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
சீன ரயில்வே பெய்ஜிங் பொறியியல் குழும நிறுவனத்திடமே இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக சீன நிறுவனம் உடன்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் வீடுகளை விரைவாக பெற்றுக் கொடுக்க இது உதவும்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 160,000 வீடுகள் தேவைப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தான், சீன நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்த வீடுகளை அமைக்கும் பணிக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.