மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேற்றிரவு எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது.
இதையடுத்து, இன்று காலை ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“மின்சாரத்தையும் எரிபொருளையும் கவனமாக பயன்படுத்துமாறும், எரிசக்தி நுகர்வை குறைந்தபட்ச அளவிற்கு மட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பதுக்கல் மற்றும் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற நடைமுறைகளை ஆதரிக்க வேண்டாம். இது தொடர்பான சம்பவங்கள் ஏதேனும் இருப்பின் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
