சீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா அதிபர் ஆதரவு
சீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா உறுதியான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக, சைனா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் முகாமைத்துவம் செய்வதற்கும், சீன முதலீட்டிலான கைத்தொழில் பூங்கா மற்றும் சீனாவின் திட்டங்களுக்கும் சிறிலங்கா அதிபர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அடுத்து, சீனத் தூதுவர் ஏற்கனவே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.