ரணிலும் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இன்று மதியம் ஐதேக தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியக்கடதாசிகளில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர், விஜேதாச ராஜபக்ச மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோர் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.