மேலும்

ரணிலை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை – கூட்டு எதிரணியிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

maithriசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் உதவியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, கூட்டு எதிரணியின் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைப்பதற்கு கூட்டு எதிரணி ஆதரவு வழங்குவதாக சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளது.

எந்த நிபந்தனையுமின்றி நாம் ஆதரவு வழங்கவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபரிடம் தாம் தெரிவித்ததாக, சந்திப்பின் பின்னர், கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினர் எவரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டார்கள் என்றும், அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போதே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோருவதாக மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, கூட்டு எதி்ரணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு, தினேஸ் குணவர்த்தனவும், சுசில் பிரேம ஜெயந்தவும் தலைமை தாங்குகின்றனர்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான அமைச்சர் துமிந்த சில்வா பங்கேற்கவில்லை. அவர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும், அந்தக் கொள்கைளை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் தாம் ஐதேகவில் இணையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்தால், சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து துமிந்த சில்வா விலகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு ஐதேகவின் 17 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தில், ஒப்பமிட கூட்டு எதிரணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *