சுஜீவ சேனசிங்க தாவினாலும் பெரும்பான்மை பலம் உள்ளது – ஐதேக நம்பிக்கை
மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், ஐதேகவைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவரது தலைமைத்துவத்தின் கீ்ழ் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவர் ஐதேக தலைமைக்கு அறிவிக்கவில்லை. அவர் கட்சி தாவலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
அதேவேளை ஐதேகவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவும், கட்சி தாவவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியான போதும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
இதற்கிடையே, ஐதேக வட்டாரங்கள் தமக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை தமது நிலைப்பாட்டை விளக்கி, சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.