மகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி?
சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி, சிறிலங்கா பொது ஜன முன்னணி 15 மாவட்டங்களில் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐதேக வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பதாக மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, இந்தத் தேர்தலில், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும் என்று வெளியான புலனாய்வு தகவல்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.