சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து
சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் 44 நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ளன. அதேவேளை, 89 நாடுகள், புதுடெல்லியில் உள்ள தமது நாட்டின் தூதரகம் வழியாகவே சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன.
புதுடெல்லியில் உள்ள தூதரகம் மூலம், சிறிலங்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வரும் நியூசிலாந்து, கொழும்பில் தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சிறிலங்காவில் தமது நாடு புதிய தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளதாக, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி கடந்த மார்ச் 22ஆம் நாள் அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, கொழும்பில் புதிய தூதரகத்தை அமைப்பதற்கான இடத்தை தேடி வருவதாக, புதுடெல்லியில் உள்ள நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ், புதுடெல்லியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
“இதற்கு சில காலம் தேவைப்படும்,2018ஆம் ஆண்டு இறுதியில் கொழும்பில் தூதுரகத்தை திறக்க முடியும் என்று நம்புகிறோம். அல்லது நிச்சயமாக, 2019 தொடக்கத்தில் திறந்துவிடுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.