மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச அமைச்சரவை உபகுழு
மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை எவ்வாறு சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இன்னமும் இறுதி இணக்கப்பாடு ஏற்படவில்லை.
விமான நிலையத்துடன் இணைந்ததாக, விமான பயிற்சி பாடசாலை, விமானப் பராமரிப்பு மையம் என்பனவற்றை அமைப்பது குறித்த யோசனைகளும் இதில் அடங்கியுள்ளன.
மத்தல விமான நிலையத்தை வர்த்தக விமான சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும், சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.