ஜூலை 29 : 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன், இப்போது சீனாவுடன்
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமை சீனாவுக்கு கைமாற்றப்படும் இந்த உடன்பாட்டுக்கு அனைத்துலக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை அளித்துள்ளன.
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் நாள் இந்திய – சிறிலங்கா இடையே அமைதி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் கைச்சாத்திட்ட இந்த உடன்பாடு, சிறிலங்கா வரலாற்றில் பல முக்கிய திருப்பங்களுக்கு வழிவகுத்தது.
இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு சரியாக 30 ஆவது ஆண்டு நிறைவில், அதே ஜூலை 29ஆம் நாளில், சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் மற்றொரு வரலாற்று முக்கியத்துமுவம் வாய்ந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டின் மூலம், இந்தியப் பெருங்கடலில் சீனா ஒரு துறைமுகத்தைப் பெற்று விட்டதாகவும், பட்டுப்பாதைத் திட்டத்தில் அம்பாந்தோட்டை இணைக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாவுக்கு பெரும் கவலை தரும் நிகழ்வு என்றும் அனைத்துலக ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றன.