சிறிலங்காவுக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் வீழ்ச்சி
சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா சுற்றுலா அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2017 ஜூன் மாதம், சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை கட்டுநாயக்க விமான நிலையம் பகுதி நேரமாக மூடப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவுக்காக சுற்றுலாப் பயணிகளின் வருகை, 4.8 வீதத்தினால் அதிகரித்திருக்கிறது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோரின் தொகை, 12.3 வீதமும், பிரித்தானியாவில் இருந்து வருவோரின் தொகை 10.8 வீதமும், ஜேர்மனியில் இருந்து வருவோரின் தொகை 28.6 வீதமும் அதிகரித்துள்ளது.
நெதர்லாந்து 40 வீதம், ஸ்பெய்ன் 44 வீதம், என சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தாலும், பிரான்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 வீதத்தினால் குறைந்திருக்கிறது,
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வருவோர் 18.8 வீதமும், ரஷ்யாவில் இருந்து வருவோர், 36 வீதமும், உக்ரேனில் இருந்து வருவோர், 26.9 வீதமும் குறைந்துள்ளது.
கிழக்காசியாவில் இருந்து வருவோர் 5.7 வீதமும், சீனாவில் இருந்து வருவோர் 13.8 வீதமும் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீனர்களின் வருகை 28.8 வீதமாக அதிகரித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வந்த போதிலும், கடந்த ஜூன் மாதத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.