சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பயிற்சித் திட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எவ்வாறு சாதகமான பங்களிப்பை அமெரிக்கா வழங்கியது என்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்திலும் சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவின் பயிற்சி வாய்ப்புகளில் கூடுதல் இடமளிப்பதற்கான தனது ஆதரவை வழங்குவதாகவும், லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க கடெற் அதிகாரிகள் சிறிலங்கா வந்த போது அவர்களுக்கு சிறிலங்கா இராணுவம் பயிற்சி அளித்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அமெரிக்க அதிகாரி, வரும் காலத்திலும் அத்தகைய உதவிகளைத் தொடருமாறும் கோரிக்கை விடுத்தார்.
இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்த முதல் வெளிநாட்டு இராஜதந்திரி லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் ஆவார்.
இவர், சிறிலங்காவில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் அவர் விடைபெற்றுக் கொண்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டார்.