கிழக்கு ஆளுனராக ஏ.எஸ்.பி.லியனகே? – அவசரமாக கட்டாரில் இருந்து திருப்பி அழைப்பு
கிழக்கு மாகாண ஆளுனராக வர்த்தகரும், கட்டாருக்கான தூதுவராகப் பணியாற்றுபவருமான ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்கா அதிபரின் செயலராக பதவியேற்கவுள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.
கட்டாரில் தூதுவராகப் பணியாற்றும் ஏ.எஸ்.பி லியனகே நேற்று கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர் நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக, மாகாண ஆளுனராகவே தன்னை சிறிலங்கா அதிபர் நியமிக்கவிருந்தார் என்றும், எனினும் அதற்கான வெற்றிடம் இல்லாததாலேயே கட்டாருக்கான தூதுவராக நியமித்தார் என்றும் ஏ.எஸ்.பி லியனகே கூறியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் அவர், கட்டாருக்கான தூதுவராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தேசிய காங்கிரஸ் கட்சியின் அதாவுல்லாவை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்க சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாக, நேற்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.