சிறிலங்காவுக்கு உதவுவதாக அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானிய தூதுவர்கள் வாக்குறுதி
வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கு உதவ அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று அவரது செயலகத்தில் சந்தித்த அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமது நாடுகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமா பல்வேறு துறைகளில் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார். கூடிய விரைவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் மின் பிறப்பாக்கிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜப்பானில் இருந்து சிறப்பு மீட்புக் குழுவொன்றும் சிறிலங்கா வரவுள்ளது.
அதேவேளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், எந்த நேரத்திலும் சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தமது நாடு தயாராக இருப்பதாக பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.