களுத்துறையில் உடையும் நிலையில் அணைக்கட்டு – மக்களை வெளியேறுமாறு அவசர அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணப்பிட்டிய பொல்கொட அணை கடும் மழையால் உடையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.
அணை உடையும் நிலையில் உள்ளதால், பாணந்துறை தெற்கு, பாணந்துறை வடக்கு, வாதுவ, பண்டாரகம, மொரொந்துடுவ, அகுருவத்தோட்ட ஆகிய இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 169 ஆக அதிகரித்துள்ளதாகவும், 112 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த சூழ்நிலைகளால், எட்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜூன் 2ஆம் நாள் வரை முடுமாறும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு, கம்பகா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளே ஜூன் 2ஆம் நாள் வரை மூடப்பட்டுள்ளன.
அதேவேளை பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை மூடுவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.