வீட்டின் மீது விழுந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை எம்.ஐ -17 உலங்குவானூர்தி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகமவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் எனினும் உலங்குவானூர்தி முற்றாக சேதமடைந்து விட்டதாகவும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார்.
உலங்கு வானூர்தியில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்தேகமவுக்குப் பொருட்களை எடுத்துச் சென்ற எம்,ஐ-17 உலங்குவானூர்தி தரையிறங்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய உலங்குவானூர்தியில் 11 பேர் இருந்தனர் என்றும் அவர்களின் ஒருவருக்கு மாத்திரமே சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரையில் மோதி விபத்துக்குள்ளாகிய உலங்குவானுர்தியின் விமானியுடன் சிறிலங்கா அதிபர் தொலைபேசி மூலம் பேசியதாகவும், அவரது அர்ப்பணிப்பான சேவைக்கு பாராட்டுத் தெரிவித்ததாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சிறிலங்கா விமானப்படை எம்,ஐ-17 உலங்குவானூர்திகள் – 07, பெல் -212 உலங்குவானூர்திகள் -03, பெல்-412 உலங்குவானூர்தி ஒன்று ஆகியவற்றை மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.