மேலும்

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே விசாரணை – மூன்று நீதிபதிகளும் நியமனம்

punkuduthivu-vithyaபுங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தை சிறிலங்காவின் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் நேற்று நியமித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான இந்த தீர்ப்பாயத்தில், அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகம் இளஞ்செழியன் ஆகிய நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்துவதற்கும் தலைமை நீதியரசர் தீர்மானித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கை கொழும்பில் மூன்று சிங்களம் பேசும் நீதிபதிகள் முன்பாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும் மற்றும் ஏனைய சமூக அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்திலேயே தமிழ் பேசும் நீதிபதிகளின் முன்னிலையில் இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதியரசர் முடிவு செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் நடந்த வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால், 41 குற்றச்சாட்டுகளை முன்வைத்து குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *