பளை துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்படுமாம்
பளை பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் ரோந்து வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், அதுபற்றிய விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிரணியின் உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, பளை காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க,
“மே 19ஆம் நாள் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஐந்து காவல்துறைக் குழுக்களும் இராணுவ குழு ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பளை காவல் நிலையம் தாக்கப்படவில்லை. ரோந்து வாகனம் மீதே சுடப்பட்டது.
விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், அதன் கண்டறிவுகள் தொடர்பான விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.