கண்டியில் பழுதடைந்த மோடியின் உலங்குவானூர்தி இந்தியாவுக்குப் புறப்பட்டது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி திருத்தப்பட்ட பின்னர் இன்று புறப்பட்டுச் சென்றது.
இந்தியப் பிரதமரின் பயணங்கள் மற்றும் பாதுகாப்புக்காக இந்தியாவில் இருந்து நான்கு எம்,ஐ-17 உலங்குவானூர்திகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படடிருந்தன.
கண்டியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் கடந்த 12ஆம் நாள் புறப்பட்ட போது ஒரு உலங்குவானூர்தியில் தொழில்நு்ட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த உலங்குவானூர்தி அஸ்கிரிய மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
புதுடெல்லியில் இருந்து உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் மற்றொரு இந்திய விமானப்படை உலங்கு வானூர்தி இன்று காலை கண்டிக்கு வந்து திருத்தப்பணிகளை மேற்கொண்டதையடுத்து, காலை 9.50 மணியளவில் இரண்டு உலங்குவானூர்திகளும் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றன.