மேலும்

கண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்.ஐ-17 உலங்குவானூர்திக்கு சிறிலங்கா காவல்துறையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் கண்டியில் இருந்து கட்டுநாயக்க புறப்பட்ட போது, இந்த உலங்குவானூர்தி பழுதடைந்தது. இதனால் அதனை அங்கேயே விட்டு விட்டு ஏனைய உலங்குவானூர்திகள் மூலம் இந்தியப் பிரதமரும் அவரது குழுவினரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

சிறிலங்கா விமானப்படையினர் வைத்திருப்பது போன்ற எம்.ஐ.17 உலங்குவானூர்தியே பழுடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்கிறது. இதனைத் திருத்துவதற்கு சிறிலங்கா விமானப்படை பொறியாளர்கள் முன்வந்த போதும் இந்தியா அதனை ஏற்கவில்லை.

புதுடெல்லியில் இருந்து தொழில்நுட்பக் குழுவினரை அனுப்பி விரைவில் அதனை திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமரின் பயண அணியில் இடம்பெற்ற உலங்கு வானூர்தியில் சிறப்பு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதுபற்றிய இரகசியங்கள் கசிந்து விடக் கூடாது என்பதற்காகவே, சிறிலங்கா விமானப்படையின் உதவியை இந்தியா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியப் பிரதமரின் பயணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு விமானத்திலும் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாகவும், எனினும், அது உடனடியாகவே இந்திய பிரதமரின் அணியில் இருந்த தொழில்நுட்பக் குழுவினரால் சீர்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *