சீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்
சிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.
தி ஹிந்து நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் இரவு சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை அடுத்து- திட்டமிடப்படாத சந்திப்பாக இது இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள இந்தியா ஹவுசில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
கோத்தாபய ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் இணைந்து மகிந்த ராஜபக்ச நடத்திய இந்தச் சந்திப்பில், இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு சுமுகமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ள ஜி.எல்.பீரிஸ், இதில் சர்ச்சைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் கேட்டதாகவும், அதற்கு அவர், மக்களுக்கு நன்மையளிக்கும் இந்திய முதலீடுகள் சிறிலங்காவில் ஊக்குவிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர் நிகிழ்வுகளில் பங்கேற்றதால் சோர்வடைந்திருக்கிறீர்கள் என்று மகிந்த ராஜபக்ச கூறிய போது, உங்களைக் கண்டதும் சோர்வு மறைந்து விட்டது என்று இந்தியப் பிரதமர் பதிலளித்தார் என்றும், புதுடெல்லி வருமாறு சென்ற முறை விடுத்த அழைப்பு அப்படியே இருப்பதாக அவர் நினைவு படுத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.