நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கிகளில் ஒன்று செயலிழப்பு
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தேவை குறைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலகுகளின் மூலம் மின் உற்பத்தி தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மின்பிறப்பாக்கி நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
சிறிலங்காவின் தேசிய மின் கட்டமைப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக விளங்கும் லக்விஜய மின் உற்பத்தி நிலையம், மூன்று முதன்மை மின் பிறப்பாக்கி அலகுகளைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு அலகும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தேசிய அமைப்புக்கு மொத்தமாக 900 மெகாவாட் திறனை வழங்குகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையம், நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால், குறைந்தளவு மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
