இரண்டு மாத சரிவுக்குப் பின் மீண்டும் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த மாதங்களில் சரிவைக் கண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகளால், விமானப் பயண நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால், பெப்ரவரி, மார்ச் மாதங்களில் சிறிலங்காவுக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி கண்டிருந்தது.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக 93 மாதங்களாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஜனவரி மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக சரிவைச் சந்தித்தது.
எனினும், ஏப்ரல் மாதம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் வழமைக்குத் திரும்பியதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது.
எனினும், கடந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 6.1 வீதத்தினால் அதிகரித்திருக்கிறது.