யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
அனைத்துலக ஊடக சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை நடத்தக் கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ். நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், யாழ். பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
யாழ். ஊடக அமையம் இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
படங்கள் – சபேஸ் (கீச்சகம்)