சரத் பொன்சேகா குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை- சிறிலங்கா பிரதமர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் எந்த முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஜேவிபி உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றுக்கு தேவை கிடையாது.கடந்தவாரம் அமைச்சரவையில் குப்பை அகற்றும் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதே தவிர, சரத் பொன்சேகா பற்றி விவாதிக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பதவி ஒன்றுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.