மேலும்

ஜெனிவாவில் காலஅவகாசத்துடன் நிதி உதவியையும் கோரவுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

Mangala-unhrc (1)ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 24 மாத கால அவகாசத்தையும், நிதி உதவியையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

வரும் மார்ச் 24ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவும் இன்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை மறுநாள் உரையாற்றவுள்ளார்.

இதன் போது, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மேலும் 18 தொடக்கம் 24 மாத கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று பேரவையிடம், கோருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு நிதி உதவியை வழங்குமாறும் மங்கள சமரவீர கோரிக்கை விடுக்கவுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள விரவான அறிக்கை மீது, வரும் மார்ச் 22ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், சிறிலங்கா தொடர்பான மற்றொரு தீர்மானமும் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *