சிறிலங்காவுடனான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை
சிறிலங்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்து கொள்வதை விட, கூட்டு முயற்சி உடன்பாடுகளைச் செய்து கொள்வதிலேயே இந்தியா ஆர்வம் காட்டுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து, சிறிலங்கா தலைவர்களுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் தொடர்பாக, கூட்டு முயற்சி உடன்பாடு ஒன்றை எட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் நடத்திய பேச்சுக்களின் போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் ஆர்வம் காட்டியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பான கேள்விப்பத்திரம் கோரப்பட்ட பின்னர் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்கா அரச தரப்புடனான சந்திப்புகளின் போது விசாரித்துள்ளார்.
அத்துடன் திரவ எரிவாயு மின் திட்டம் மற்றும் ஏனைய பல திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.