நிலையான அமைதிக்கு நல்லிணக்கம் முக்கியம் – அமெரிக்க குழுவிடம் சம்பந்தன்
சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் முக்கியமானது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டு, கொழும்பு வந்துள்ள அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இந்தச் சந்திப்பில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான பீற்றர் ரோஸ்கம், டேவிட் பிரைஸ், ஜெரி கொனோலி, அட்ரியன் ஸ்மித் ஆகியோருடன், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் கலந்து கொண்டார்.
அதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர், கரு ஜெயசூரிய, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியது.