சிறிலங்காவுக்கு உடனடி வரட்சி நிவாரணம் – இந்தியா அறிவிப்பு
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 100 மெட்றிக் தொன் அரிசியையும், 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி உதவியாக இந்தியா வழங்கவுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவையும், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுக்களில், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டிருந்தார்.