பொறுப்புக்கூறலை விட எதிர்காலத்தின் மீதே தமிழ் மக்களுக்கு அதிக கரிசனை – என்கிறார் சந்திரிகா
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக பணியாற்றும் சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மீறல்களுக்கு யாரோ சிலர் பொறுப்பேற்க வேண்டும்.
மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நல்லிணக்க விவகாரங்களுடன் தொடர்புபடவில்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள், தமது எதிர்காலம் குறித்தே அதிகம் கரிசனை கொள்கின்றனர்.
தேசிய நல்லிணக்கத்துக்கான கொள்கையும், புதிய அரசியலமைப்புமே தற்போது அவசியமானவை. இதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதனை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு அங்கம் தான் பொறுப்புக்கூறல்.
எமது நீதித்துறையால் சரியாக செய்ய முடியுமானால், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு தேவையிருக்காது. வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய அரசியலமைப்பு முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.