45 ஆவது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். வொசிங்டனில் நேற்று நடந்த இந்த விழாவில், அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ஜி.ரொபேர்ட்ஸ், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கனின் பதவியேற்பின் போது பயன்படுத்தப்பட்ட மற்றும் ட்ரம்பின் தாயார் 1955ஆம் ஆண்டு வழங்கிய – இரண்டு பைபிள்களின் மீது கைவைத்து ட்ரம்ப் உறுதியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா பங்கேற்று, பொறுப்பை ட்ரம்பிடடம் கையளித்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் புதிய துணை அதிபராக மைக் பென்சும் பதவியேற்றார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், இஸ்லாமிய தீவிரவாதத்தை உலகில் இருந்து அடியோடு அகற்றப் போவதாகவும், அமெரிக்காவின் எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்கப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.