புதிய இந்தியத் தூதுவர் வரும் வரை முடிவை நிறுத்தி வைத்தார் சிறிலங்கா பிரதமர்
இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரையில், இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பெற்றேலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மின்சார உற்பத்திக்காக இந்த குதங்களில் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், சீனக்குடா எண்ணெய்க் குதங்களை ஆய்வு செய்வதற்கு மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்தியன் ஓயில் நிறுவன அதிகாரிகள், சிறிலங்கா அதிகாரிகளை எண்ணெய்க் குத வளாகத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்ததாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
குத்தகைக்கு வழங்கப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளவும் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது குறித்து, புதிய இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்த வேண்டியிருப்பதாலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று, பெற்றோலியக் கூட்டுத்தாபன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்காக, எரிபொருளை சேமித்து வைப்பதற்கு, அவசரமாக மூன்று எண்ணெய்த் தாங்கிகள் தேவைப்படுவதாக, அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
இதற்கிடையே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியத் தூதுவர் தரம்ஜித்சிங் சந்து, வரும் 26ஆம் நாளுக்கிடையில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.