அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற நேரிடும் – கூட்டமைப்பு எச்சரிக்கை
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை சிறிலங்கா அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தேசியப் பிரச்சினைக்கு வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பது என்ற மக்களின் ஆணையை நாம் பெற்றிருக்கிறோம்.
இதுதொடர்பாக எப்படி ஒரு சிறந்த உடன்பாட்டுக்கு வரலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசி வருகிறோம்.
விரிவான அதிகாரப் பகிர்வுக்கான பொறிமுறையாக 13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் ஏற்கமாட்டோம்.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை சிறிலங்கா அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.