ரவிராஜ் கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ரவிராஜின் மனைவியின் சார்பாக, சட்டவாளர் சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூரிகள் சபையின் முன்னார் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டது தவறு என்றும், எனவே ஜூரிகள் இல்லாத நீதிமன்றத்தினால் வழக்கு மீள்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.