அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க
2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேன இதுவரை எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் என்பதால், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் கோருகின்றனர்.
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி கோருகின்ற போது, கட்சியின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேனவினால் அதனை மறுக்க முடியாது.
அவர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.