மகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பாக சமல் ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்தனர்.
இதன்போது மல்வத்தை பீட மகாநாயக்கர், உடன்பாடுகள் செய்து கொள்ளப்படும் போது வெளிப்படைத்தன்மை அவசியம் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர், தெரிவித்தார்.
முதலில் உடன்பாடுகளை நாம் படிக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் கி்டைக்கும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றும் மல்வத்தை மகாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சமல் ராஜபக்ச “நான் அமைச்சராக இருந்த போதே கைத்தொழில் அபிவிருத்திக்காக அம்பாந்தோட்டை துறைமுகம் கட்டப்பட்டது. இந்த உடன்பாட்டினால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இரகசிய உடன்பாட்டின் மூலம் துறைமுகத்தையோ, நிலங்களையோ வழங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.முதலில் உடன்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த உடன்பாடு குறித்து அம்பாந்தோட்டை மக்கள் கவலையடைந்துள்ளனர். தமது நிலங்கள் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளதையிட்டு, அவர்கள் கோபம் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.