மேலும்

வனாட்டு தீவில் சிறிலங்கா மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய கப்பல் தடுத்து வைப்பு

vanuatu-shipபசுபிக் தீவான வனாட்டுவில் சிறிலங்காவைச் சேர்ந்த மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய எம்.வி.குளோரி (MV Glory) என்ற பெயர் கொண்ட மீன்பிடிக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்தக் கப்பலில் எந்த மீன்பிடி கருவிகளும் இல்லை என்றும், இதனால் தீவுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பலின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் நன்றாக ஆங்கிலம் பேசுவதாகவும் வனாட்டு நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு பதில் முகாமையாளர், பாட்லி ரரி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இருந்து வனாட்டுவின் போர்ட் விலா நோக்கி தாம் பயணித்துக் கொண்டிருந்ததாக இந்தக் கப்பலின் மாலுமிகள் தெரிவித்துள்ளனர். எனினும், கப்பலின் மூல அடையாளத்தை இவர்கள் நிரூபிக்கத் தவறியுள்ளனர்.

இருபது ஆண்டுகள் பழமையான இந்தக் கப்பலின் முன்னைய உரிமையாளர் இலங்கையர் என்றும், அவர் ஜப்பானில் வைத்து இதனை விற்று விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

vanuatu-ship

எனினும், முறையான பதிவு ஆவணங்கள் ஏதும் இவர்களிடம் இல்லை என்று வனாட்டு நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு பதில் முகாமையாளர், பாட்லி ரரி தெரிவித்தார்.

இந்தக் கப்பலை ஜேபிஓ காவா எக்ஸ்போட் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான போல் ஒக்ரென் என்பவரே வாங்கியுள்ளதாகவும், ரரி கூறியுள்ளார்.

இந்தக் கப்பலின் தலைவர் ஏற்கனவே வணிக கப்பல்களில் பணியாற்றி வந்ததாகவும், முதல் முறையாக இந்தக் கப்பலுக்கு தலைவனான பொறுப்பேற்றிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

கப்பலை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு தாம் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கடவுச்சீட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *