துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனகொலபெலெஸ்ஸவில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் என்ற வகையில், தேர்தல் ஆணைக்குழுவைச் சந்தித்த போது, உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
இந்த ஆண்டில் முதல் காலாண்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை காணிகள் சீனாவுக்கு விற்கப்படவுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. தோல்வியுள்ள அரசியல்வாதிகள் தமது அரசியல் எழுச்சிக்காகவே இத்தகைய பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.
சீனாவுக்கு ஒரு அங்குல நிலம் கூட விற்கப்படாது. மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக, கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக சீனாவுக்கு குறிப்பிட்ட கால குத்தகை அடிப்படையில் தான் நிலங்கள் வழங்கப்படும்.
வாக்குகளால் மாத்திரம் தான் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். துப்பாக்கிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.