சீனக்குடா விவகாரம் குறித்த இந்திய அரசுடன் தான் சிறிலங்கா பேச வேண்டும் – ஐஓசி
திருகோணமலை – சீனக்குடாவில், ஐஓசி எனப்படும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரட்சி நிலையைக் கருத்தில் கொண்டு, மேலதிக டீசல் மற்றும் எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில், சீனக்குடாவில் உள்ள மூன்று எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து மீளப் பெறும் அமைச்சரவைத் தீர்மானம் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உறுதி செய்துள்ளார்.
தேசிய தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தில் தலையிடும் உரிமை எந்தவொரு நிறுவனத்துக்கும் கிடையாது. எனினும், அயல்நாட்டுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை என்றும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள், சீனக்குடா எண்ணெய்க் குதங்களைப் பார்வையிடுவதற்குச் செல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, தேவைப்பட்டால் சிறிலங்கா எந்த எண்ணெய்க் குதங்களை மீளப்பெற முடியும், இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடனேயே சிறிலங்கா அரசாங்கம் பேச வேண்டும் என்று, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.