ஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்
கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.
இந்தியத் தூதரகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்த இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்டன் பிரகாஸ் கோபாலன் மற்றும், சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய சீன மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூத்த கேணல் லி செங்லிங் ஆகியோரே பணியை முடித்து நாடு திரும்பவுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை தனித்தனியாகச் சந்தித்து முறைப்படி விடைபெற்றுக் கொண்டனர்.
சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகிச் செல்லும், கேணல் லி செங்லிங்குடன், புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பெயரிடப்பட்டுள்ள சீன இராணுவ அதிகாரியும் சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துள்ளார்.