அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து
அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.
சீன அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டுக்கு முன்னோடியாகவே இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதற்காக, சீன நிறுவனம், 1.2 பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்கும். இதில், 5 மில்லியன் டொலர் கட்டமைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதும், பாதுகாப்பு வைப்பு நிதியாக வழங்கப்படும்.
10 வீதமான கொடுப்பனவு, ஒரு மாதத்துக்குள்ளாகவும், 30 வீத கொடுப்பனவு, 3 மாதங்களுக்குள்ளாகவும், ஆறு மாதங்களில் 60 வீதமான கொடுப்பனவும் வழங்கப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 20 வீத உரிமை மாத்திரமே சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு இருக்கும்.
இந்த உடன்பாடு 99 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
இதுதொடர்பான உடன்பாடு, அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி கையெழுத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.