விசாரணைக்குழுவில் மூவரா – நால்வரா? – குழப்பும் தகவல்கள்
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “ யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், இந்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.
இந்தக் குழுவுக்கு, சிங்களவரான மூத்த பொறியியல் பேராசிரியர் ஒருவர் தலைவரான நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மருத்துவர்களும் மற்றொரு பொறியியலாளரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருமே, பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாவர்.
இந்த நால்வர் குழுவின் விசாரணை அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றையே தாம் நியமித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்த அரசரட்ணம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.