மேலும்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் மாலினோவ்ஸ்கியும் சிறிலங்கா வருகிறார்

Tom-Malinowskiஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை 12ஆம் நாள் தொடக்கம், 20 ஆம் நாள் வரை சிறிலங்காவிலும், கம்போடியாவிலும் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்க மற்றும் உள்ளூர் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

சிறிலங்காவில் அவர், கடந்த செப்ரெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து, கவனம் செலுத்தவுள்ளார்.

நீதி மற்றும் நல்லிணக்க விவகாரங்களில், எஞ்சியுள்ள பணிகள் தொடர்பாக அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கும், அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலும், மூன்று நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார்.

அவருடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலர் மான்பிரீத் ஆனந்தும் கொழும்பு வரவுள்ளார்.

இவர்கள் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

நாளை மறுநாள் புதன்கிழமை காலை 11 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *