கைது செய்யப்பட்டார் நாமல் ராஜபக்ச – கோத்தாவிடம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாகவே அவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைக்காக, இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலையானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மற்றொரு நிதிமோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.
அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.