வட- கிழக்கில் பொருத்து வீடுகளைப் பெற 92 ஆயிரம் பேர் விண்ணப்பம்
வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு, 92ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தினால், 65 ஆயிரம் உருக்கு வீடுகளை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பொருத்து வீடுகளைப் பெறுவதற்கே, 92ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 32ஆயிரம் பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5500 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7420 பேரும், மன்னாரில் 15ஆயிரம் பேரும், வவுனியாவில் 13,066 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 9 ஆயிரம் பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2486 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 7563 பேரும், இந்த வீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.