மேலும்

சம்பந்தன் படை முகாமுக்குள் நுழைந்த விவகாரம்- தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதம்

sampanthanகிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் முன்அனுமதி பெறாமல் நுழைந்ததாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தேசிய பாதுகாப்புச் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தலைமையில் நடக்கவுள்ள தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாகவும், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சிறிலங்கா காவல்துறை தனியான விசாரணைகளை நடத்தும் என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இராணுவத் தரப்பினால் இரா. சம்பந்தனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை என்றும், எனவே இதுகுறித்து விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை என்றும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *